பஸ்களில் புதிய கட்டணப் பட்டியல் கட்டாயம். போக்கு வரத்து அதிகாரசபை!
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 12.19% பஸ் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய கட்டண விபரங்களை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துமாறு போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய விதிமுறைகள் மற்றும் தண்டனைகள்:
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, ஒவ்வொரு பேருந்திலும் திருத்தப்பட்ட கட்டணப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் (Permit) தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்து செய்யப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட மேலதிகமாக அறவிட முடியாது. அவ்வாறு அறவிடுவது சட்டவிரோதமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
புதிய கட்டண விபரங்கள் :
குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 27 இல் இருந்து ரூ. 30 ஆக அதிகரிப்பு.
அதிகபட்ச கட்டணம்: ரூ. 2,159 இல் இருந்து ரூ. 2,422 ஆக அதிகரிப்பு (ரூ. 263 உயர்வு).
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

